மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மீனவர்களின் வலையில், சுமார் 300 கிலோகிராம் எடையுடைய அரிய வகை ஆழ்கடல் மீன் ஒன்று இன்றைய தினம் திங்கட்கிழமை (2026 செப்ரெம்பர் 14) அதிகாலை சிக்கியுள்ளது.ஆழ்கடல் வாழ் உயிரினமான குறித்த மீன், பொதுவாக அப்பகுதி மீனவர்களால் “கொப்பறா” என அழைக்கப்படுகின்றது.
வேகமாக நீந்தும் திறனுடைய இக் “கொப்பறா” மீன், நீளமான கூர்மையான மூக்குப் பகுதியைக் கொண்ட விசேட உடல் அமைப்பைக் கொண்ட ஆழ்கடல் மீன் வகையாகும். சாதாரண மீன்களை விடப் பருமனில் மிக பிரமாண்டமாகக் காணப்படுவதால், இக் காட்சியை நேரில் பார்வையிட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
வலையில் சிக்கிய குறித்த ராட்சத மீனுடன் மீனவர்கள் மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.





